Exam

புதன், 9 ஜூன், 2010

நல்லாசிரியருக்கான அமெ. விருது இம்முறை இந்தியருக்கு!



ஆசிரியருக்கான விருது, இம்முறை அமெரிக்க வாழ் இந்தியரான ராதிகா பிளக்காட் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணித பாடங்களைச் சிறப்பாக கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதியின் 'நல்லாசிரியர்' விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு நல்லாசிரியர் சான்றிதழும், ரூ.5 லட்சம் பரிசும் அதிபரால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான சிறந்த அறிவியல் ஆசிரியருக்கான விருது, அமெரிக்காவில் வாழும் இந்தியரான ராதிகா பிளக்காட் என்பவருக்கு வழங்கப்பட்டது. இதற்கான விருதை அதிபர் ஒபாமா வழங்கிப் பாராட்டினார்.

ராதிகா பிளக்காட், மேரி லேண்டில் கல்வெர்ட் கவுண்டியிலுள்ள கண்டிங்டவுன் உயர் நிலைப்பள்ளியில் உயிரியல் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். _

பிரபல கணிதத்துறை ஆசிரியர் மாரடைப்பால் மரணம்



மலையகத்திலிருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட பொறியியற்துறை
மாணவர்களை உருவாக்குவதற்குக் காரணமாகவிருந்த ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் கணிதத்துறை ஆசிரியர் கே.ஜீவராஜன் நேற்று 8 ஆம் திகதி மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

வகுப்பில் நேற்றுக் கற்பித்துக் கொண்டிருந்த வேளை, திடீரென மயக்கமுற்றுக் கீழே விழுந்த இவர், உடனடியாக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றபோது உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

1995 ஆம் ஆண்டிலிருந்து ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் உயர்தர கணிதத்துறையில் கல்விக் கற்பித்து வந்த இவரிடம் பயின்ற 200க்கும் மேற்பட்ட மலையக மாணவர்கள் தற்போது பொறியியலாளர்களாக உள்ளனர். மேலும் பல மாணவர்கள் பல்வேறு துறைகளில் பதவி வகித்து வருகின்றனர்.

இவர் பல வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் பெற்று, வெளிநாடுகளுக்கும் சென்று வந்தவராவார். ஹட்டன் கல்வி வலயத்தின் கணிதப்பாட ஆசிரியர் ஆலோசகராகவும் இவர் சேவையாற்றியுள்ளார்.

ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சர்வதேச ஒலிம்பியாட் கணிதத்திறன் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சர்வதேச ஒலிம்பியாட் கணிதத்திறன் போட்டியில் ஹைலண்ஸ் கல்லூரி மாணவர் ஒருவர் இலங்கைக்கு வெண்கலப் பதக்கமொன்றைப் பெற்றுத் தருவதற்கும் இவரே காரணகர்த்தாவாவார்.

மலையகத்தமிழ்க் கல்வித்துறை வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஆசிரியர் ஜீவராஜனின் இழப்பு ஈடுசெய்ய முடியாததொன்றாகும்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை 10 ஆம் திகதி ஹட்டனில் இடம்பெறுமெனத் தெரிவிக்கப்படுகிறது. (நன்றி-வீரகேசரி)

அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.