Exam

வெள்ளி, 31 அக்டோபர், 2008

அன்று திரையரங்காக இன்று உணவகமாக ரோயல்

இது தான் எங்கட ஊரில முதன் முதலாக தொடங்கப்பட்ட ஒரு நல்ல வெளிநாட்டு (இந்திய) உணவு வகைகளைக் கொண்ட உணவகம். இது முன்பு ரோயல் திரையரங்கம் என்று அழைக்கப்பட்ட திரையரங்கம். நாங்க சின்னப்பிள்ளையா இருக்கும் போது இங்க நியுந்திரா, வசந்தி, ஸ்ரீமுருகன், ரோயல் திரையரங்குகள் இருந்தன. இப்போது வசந்தி மட்டுமே திரையரங்காக உள்ளது. நியுந்திரா திரையரங்கு இடிக்கப்பட்டு பாழடைந்து உள்ளது. ஸ்ரீமுருகன் இருந்த இடத்தில் ஓர் புதிய அடுக்குமாடிக் கட்டிடம் கட்டப்பட்டுவிட்டது. மிஞ்சிய ரோயல் திரையரங்கும் இன்று மண்டபமா மாற்றப்பட்டு கீழே நிழற்படத்தில் உள்ளதுவாறு காட்சி அளிக்கின்றது. இதற்கு பின்பகுதியில் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது தான் ரோயல் ரெஸ்ரோரன்ட் என்பது.
எனக்கு இந்த உணவகத்திற்கு போகும் போதெல்லாம் 1980ற்கும் 1986ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நான் என் பெற்றோருடன் பார்த்த திரைப்படங்களின் காட்சிகள் ஞாபகத்திற்கு வரும். இன்னமும் காளி திரைப்படத்தில் ரஜனி ஒருவனின் முதுகில் காளி என்று போத்த ஓடினால் எழுதிய காட்சி மனத்திரையில் உள்ளது. சற்று சிறுவயது நினைவுகளை அசைப்போட்டபடியே சூடான உணவினையும் அசைப்போட்டு சாப்பிட்டு வருவேன்.

இங்கே எனக்கு பிடித்த உணவு பிரைட் ரைஸ் தான். ஆனாலும் திருச்சியில் (தமிழகத்தில்) உள்ள பனானா லீப்புக்கு ஈடாகாது. அதற்கு முக்கிய காரணம் அங்கிருக்கும் மூலப்பொருட்கள் இங்கு கிடைப்பதில்லை. அதைவிட நாம் மல்லி இழைகளை உணவில் சேர்ப்பதில்லை. இவர்தான் ரோயல் கார்டனில் சாப்பிடுபவர்களிடம் உணவு வரி வசூலிப்பவர். முதலில் தனியாக வந்தார். பிறகு ஒரு பாய் பிரண்ட். இப்பொழுது குடும்பம் குட்டி என்று பயங்கர பிசி ஆகி விட்டார். இவரின் தொல்லை சற்று தாங்க முடியவில்லை தான்.


திருச்சியில் (இந்தியாவில்) இருந்து வந்து இங்கு பணிபுரிந்தவர்களில் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு நபர். மற்றவர்கள் தாயகம் சென்று விட்டனர். இவர் அதிகம் கதைக்க மாட்டார். தன் வேலையை சரியாக செய்து முடிப்பார். திருச்சி பெரிய மிளகுப்பாறையைச் சேர்ந்தவர்.


இவர் தான் ரோயல் கார்டினின் காவலாளி. வயதானாலும் மிடுக்கு குறையாதவர். நமது வாகனங்களை சரியாக நிறுத்தாவிட்டால் உடனே இவரிடம் இருந்து குரல் ஒலிக்கும்.

இன்னும் பல உணவகங்கள் வந்துள்ளன. அவையும் நன்றாக உள்ளன. குறிப்பாக தங்கும் வசதியுடன் நெல்லி , சுவர்க்கா, புலேஸ் பல்மோரல்.... என்று ...

புதன், 29 அக்டோபர், 2008

பகிடிவதையாம். எங்கே பகிடி? வதை மட்டுமே இங்கு!.

என் அன்பிற்குரிய இளைய சமுதாயமே!
நாம் பல்கலைக்கழகம் செல்வது படித்து பட்டம் பெறவே. எம் ஆழ்மனதில் இருக்கும் காட்டுமிராண்டித்தனமான மிருகங்களை வெளிப்படுத்தும் இடம் பல்கலைக்கழகம் அல்ல. ரேக்கிங் என்று சொல்லக் கூடிய பகிடி(வதை) என்பது புதிதாக வரும் மாணவர்களை தங்களுடன் நட்பு ரீதியாக சேர்த்துக்கொள்ள 2ஆம் 3ஆம் ஆண்டு மாணவர்கள் அவர்களை கிண்டலாக சில நடவடிக்ககைகளை மேற்கொள்ள வைப்பதே. அதனால் புதியவர்களுக்கு கூச்சம் அற்று புதிய சூழலுக்கு தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்பதாலேயே பல்கலைக்கழகமும் அவற்றை அங்கீகரிக்கின்றது.

ஆனால் ராக்கிங் (பகிடிவதை) என்ற பெயரில் இன்று நடைபெறுவது என்ன? எனது மாணவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டால் எனக்கே பயமாக இருக்கின்றது. ஒரு சில மாணவர்கள் தாம் மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டதாகவும். ஏன் அடிக்கின்றார்கள் எதற்கு அடிக்கின்றார்கள் என்று தெரியாமல் அடி வாங்குவதாகவும் கூறினார்கள். இதற்கு பூசா மற்றும் வெலிக்கடை, மகசின் சிறைச்சாலைகள் எவ்வளவோ பரவாயில்லை போலும். ஒரு மாணவர் இவர்களின் அடி தாங்க முடியாமல் தன் கையையே பிளேடால் அறுத்துக் கொண்டுள்ளார். 30 தையல் இடப்பட்டு மருத்துவ மனையில் உள்ளார். இதில் முழுப்பொறுப்பையும் முதுநிலை மாணவர்களின் பாற் சொல்ல முடியாது. ஏனென்றால் எல்லா பல்கலைக்கழகத்திலும் Anti Raking என்ற கொள்கை ஒன்று உள்ளது. நீங்கள் விரும்பா விட்டால் அந்த மாணவனை ராக்கிங் செய்வதில்லை. ஆனால் அதன் பிறகு அந்த மாணவன் ஒதுக்கப்பட்டவனாகக் கருதப்படுகின்ற நிலை. எங்கே தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமோ என்று இதைப் பல புதியவர்கள் விரும்புவதில்லை (பழைய நோட்ஸ் தரமாட்டார்களாம்). ஆனால் பகிடிவதையின் பெயரால் நடக்கும் கொடுமைகளையும் தாங்க முடியாமல் படிப்பை விட்டவர்கள் பலர். பல்கலைக்கழகத்திற்கு செல்லாமல் வேறு துறைகளை தேர்ந்தெடுத்தவர்கள் பலர் பலர்.

எம் தமிழ் இளைய சமுதாயமே! நாம் எவ்வளவோ இன்னல்களுக்கு மத்தியில் தான் படிக்க பல்கலைக்கழகம் செல்கின்றோம். நமது வக்கிர குனங்களை காட்டும் இடம் அதுவல்லவே! எவ்வளவோ ஏக்கங்களுடன் தங்கள் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு கற்பனைச் சிறகுடன் வரும் எம்தமிழ் உறவுகளை நீங்களே இவ்வாறு நடத்தலாமா?

நான் எல்லா முதநிலை மாணவர்களையும் குறை சொல்லவில்லை. இங்கு யாரையும் குறை சொல்லவும் வரவில்லை. என் மன ஆதங்கத்தை வெளியிட்டேன். அவ்வளவு தான்.

புதிதாய் பல்கலைக்கழகம் செல்லும் இளையவர்களே! நீங்கள் படும் இன்னல்களை அடுத்த வருடம் உட்புகும் உங்கள் உறவுகளுடன் காட்டாதீர்கள். இது மாமியார் மருமகள் கொடுமையில்லையே? தான் பட்டதை தன் மருமகளிடம் காட்டுவதை போல். நீங்கள் அனுபவிக்கும் இன்னல்களை உங்களுக்கு இளையவரிடம் நீங்கள் காட்டமாட்டோம் என்று உறுதி பூண்டால் தான் இந்தப் பிரச்சினை நிறைவேறும். அதை விட்டும் நான் அனுபவித்த கொடுமையவிட வரும் ஆண்டு வரும் மாணவர் இன்னும் அனுபவிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இது தீராது. அதன் பிறகு எங்களைப் போன்றவர்களிடம் வந்து புலம்பாதீர்கள்.
புதியவர்கள் உங்கள் உறவுகள். உங்கள் சகோதரர்கள். நம் இனத்தவர்கள். அவர்களை நாமே வேதனைப்படுத்தலாமா? வேண்டாமே!

திங்கள், 27 அக்டோபர், 2008

வவுனியாவின் கிராமப்புறங்கள்

வவுனியா சிதம்பரபுரம், ஆசிகுளம், கல்நாட்டினன்குளம், சமளன்குளம் ஆகிய பிரதேசங்களின் சில பகுதிகளை நேற்று நிழற்படம் எடுத்தேன். அவற்றினை தங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன்... தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கைளையும் இட்டுச் செல்லுங்கள்... அவை எனக்கு இத்தளத்தினை வளர்க்க உதவும்.



எங்கட வவுனியாவில இப்படியான எழில்கொஞ்சும் இடங்களும் இருக்கு. ஆனா என்ன பலருக்கு தெரியிரதில்லை.


செப்பனிடப்படாத பாதை. சுமார் 1 கி.மீற்றர் அடிவாரத்தில் உள்ளது. இதன் வழியாகத்தான் மலையேற வேண்டும். (ஆனால் பாருங்கள் இந்தப்பாதை இப்படி இருந்தால் தான் பழமை மாறாமல் இருக்கும் என்பது எனது கருத்து)

இது மலையின் மீது புதிதாக அமைக்கப்பட்டு வரும் கோயில். மிகவும் பொருளாதாரத்தாலும், பொருட்களை மேலே எடுத்துச் செல்வதில் உள்ள சிரமத்தினாலும் சற்று மெதுவாகவே வேலைகள் நடைபெற்று வருகின்றது.

இவர் தான் நிழற்படம் எடுக்க உதவிய உதவியாளர். எனக்கு மகன்முறை. 10ஆம் ஆண்டு படிக்கிறார். அடிக்கடி தலையில் குட்டும் வாங்குவார் ஏதாவது மொக்கை தனமாகச் சொல்லிப்போட்டு. (ஆனா நல்ல மண்டக்காரன்)
அப்பாடா மலையேறிய களைப்பு, இரவு சற்று தூங்கலாம் என்றால் எனது தகவல் தொழில் நுட்ப மாணவர்கள் 2 மணி 3 மணிக்கெல்லாம் தொலைபேசியில் அழைத்து சந்தேகம் கேட்கின்றார்கள். (அதிலும் வலைப்பதிவாளர் மேனனின் தொல்லை தாங்க முடியவில்லை) அது தான் என்னையும் அறியாமல் சற்று கண்ணயர்ந்துவிட்டேன்.
ம் மழைக்காலம் ஆரம்பிச்சாச்சி இனி தோட்ட வேலைகளைப்பார்க்கனும் தானே?

இது தான் கல்வாரிமலையின்அடிவாரம். இது ஒரு கற்கலால் ஆனா ஒரு சிறு குன்று. கிறித்துவர்களின் புனித தலம். நல
கல்வாரி மலையில் உள்ள அறிவிப்புப் பலகை. கட்டாயம் இது தேவைதான். புனிதமான இடங்களை தங்கள் களியாட்டத்திற்கு பயன்படுத்துவோர் உணரவேண்டும். கல்வாரி மலையின் கீழ் உள்ள அலுவலகம் இப்பொழுது தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த இடம் தான் மருதங்குளம் இது சமளன்குளத்திற்கு அடுத்துள்ள பகுதி. விவசாயபூமி.

வியாழன், 23 அக்டோபர், 2008

மாவட்ட இளைஞர் பயிற்சி நிலையம்

இவர்கள் தான் எனது மாணவர்கள். தகவல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள். இது வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அமைந்துள்ளது. இதில் உள்ள அனைவருக்கும் வலைப்பதிவு பற்றி கருத்தரங்கு ஒன்றினை செய்துள்ளேன். பலர் ஆரம்பித்தனர். ஆனால் இரண்டு மாணவர்கள் மட்டுமே செயற்படுத்தி வருகின்றனர். ( மேனனின் கணினி உலகம், மற்றது திலீப்பின் சுவடுகள்)


இடதுபக்கம் நிற்பவர் கணினி வன்பொருள் திருத்தும் பயிற்சி நெறியின் ஆசிரியர், நடுவில் நிற்பவர் வானொலி தொலைகாட்சி திருத்தும் பயிற்சி நெறியின் ஆசிரியர். அடுத்து நிற்பது தகவல் தொழில்நுட்ப பாடநெறியின் ஆசிரியராகிய அடியேன் தான்...


புதன், 22 அக்டோபர், 2008

எழில்மிகு வவுனியா..

வவுனியாவில் நிறைய எழில் மிகு இடங்கள் இருக்கின்றன. ஆனால்... தற்போதைய சூழலில் அவற்றினை நிழற்படம் எடுக்கும் நிலையில் வவுனியா இல்லையே... எனவே என்னால் இயன்ற எனது பிராந்தியத்திற்குள் உள்ள சில கிராமப்புறங்களையும் ஆலயங்களையும் நிழற்படம் எடுத்துள்ளேன். இப்பொழுது தான் ஒரு நல்ல நிழற்பட கருவி ஒன்றை வாங்கியுள்ளேன். இனி தொடரும் என் புகைப்பட பணி...இது ஒன்றும் தடுப்பு காவலரன் அல்ல. கிணறு வெட்டிய மண்குவியல் தான் என்ன தான் யுத்தம் நடைபெற்றாலும் வீடு கட்டுபவர்கள் கட்டிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

வவுனியா கோவில்குளம் சிவன் கோவில் முன்பு சிரமதானப்பணிக்கு வந்த புதுக்குளம் மகாவித்தியாலய சாரணர்கள்.

வவுனியா சமளன்குளத்தில் அமைந்துள்ள கல்லுமலைப்பிள்ளையார் கோவில் (நான் பிறந்த இடம் என்ற பெருமை எனக்குண்டு அது மட்டுமல்ல எனது தந்தையாரால் உருவாக்கப்பட்ட ஆலயங்களுள் இதுவும் ஒன்று)
இன்று தொல்பொருள் ஆராய்ச்சித் தினைக்களத்தின் வசம் உள்ளது.



அப்பாடா நிழற்படம் எடுத்து களைச்சிப் போயிட்டன் கொஞ்சம் பொறுங்க... ஓய்வெடுத்திட்டு வாரன்... (என்னதான் elephant house, Gar gills Ice creamங்கள் இருந்தாலும் இந்த சைக்கிள்காரர் விற்கிற 15 ரூபா Ice பழத்திற்கு நிகராகுமா?)

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள எழில் மிகு சிறு குன்றில் வீற்றிருக்கும் முருகன் ஆலயத்தின் தோற்றம் இது. இந்த ஆலயம் பற்றி வவுனியா வாழ் மக்கள் பலருக்கே தெரியாது. தற்போது பிரபல்யமாகி வரும் ஒன்று. எங்கே இயற்கை சூழலையும் இதன் அமைதியையும் கெடுத்து விடுவார்களோ என்ற அச்சம் எனக்குண்டு. இதற்கு அருகில் கல்வாரி மலை அமைந்துள்ளது. அடுத்த பதிவுகளில் அதன் எழில்மிகு தோற்றத்தை வெளியிடுகின்றேன்.
எனது கணினி நிறுவனத்தின் பின் பகுதியில் அமைந்துள்ள பகுதி இதுவாகும். இது சிவன் ஆலயத்தின் பராமரிப்பில் உள்ளது. காடு மன்றிக் கிடந்த இந்த இடம் இப்பொழுது அறங்காவலர்களின் அயராத உழைப்பில் நெல் விளையும் விளை நிலமாகமாற்றப்பட்டு வருகின்றது.
சமளங்குளத்தின் அணைக்கட்டின் ஓர் தோற்றம்.
சமளங்குளத்தின் குளத்தின் உள்ளே ஓர் மரத்தில் அந்திப் பொழுதில் நாரைகளும் கொக்குகளும் அடைக்கலம் ஆகும் காட்சி... (வெளிநாட்டு சில பறவை இனங்களும் அடக்கம்). நல்ல நிலையில் நாம் இதை பராமரித்தால் இதுவும் ஓர் வேடந்தாங்கல் தான். பார்ப்போம் காலப்போக்கில் மாற்றங்கள் வரலாம்.....

செவ்வாய், 21 அக்டோபர், 2008

என் தேசத்து மகவுகளே

நாணற் புற்களாய் கூனற் போட்டது போதும் மனிதா!
வீறு கொண்டு எழுந்திடு ஆலம் விழுதுகளாய்....
எம்முள் வேண்டாமே பிளவுகள் பின் ...
பிளவுக்குள் அகப்பட்ட ஆப்புகளாய் நாம்....

அன்னைமண் நமை படைத்திட்டது
நாம் அன்புடன் வாழவே...
அவனியில் அடிப்பட்டடு சாவதற்கல்லவே...

அளவோடு ஆசைப்படு!

தற்பெருமை பேசியே தமையழி்த்துக் கொண்டோர் பலர்! பலர்!!
அவையடக்கமின்றி அழிவுற்றோர் பலர்! பலர்!!
நாவடக்கமின்றி நசிவுண்டோர் பலர்! பலர்!!
புலனடக்கமின்றி தம் புலமைகளை இழந்தோர் பலர்! பலர்!!
தன்னடக்கமின்றி தனித்திற்றோர் பலர்! பலர்!!
பெண்ணாசைக் கொண்டு மண்னோடு மண்ணாய் ஆனோர் பலர்! பலர்!!
மண்ணாசை கொண்டு ஆறடி நிலத்திற்குல் அடைப்பட்டவர்
பலர்! பலர்!!
ஐம்புலன்களையும் அடக்கி அகிலத்தை ஆண்டிற்றோர் சிற்சிலரே!!!

சனி, 11 அக்டோபர், 2008

இந்து சமயத்தினரை வேதனைப்படுத்தாதீர்

சற்று முன்னர் தான் விஜய் தொலைக்காட்சியில் “ஜோடி நொம்பர் 1-சீசன் 3” பார்த்தேன். அதில் ஒரு ஜோடியினர் கிருஸ்ணர் வேடமிட்டு ஆடிய நிகழ்வை பார்த்த போது சற்று அதிர்ந்து தான் போனேன். என்ன இந்துசமயத்தின் கடவுகள் இவர்களுக்கு கேலிப் பொருட்களா? நான் கேட்கின்றேன் இவர்களால் மற்ற மதங்களின் கடவுள்களை இவ்வாறு கேலிப்பொருட்களாக ஆக்க இயலுமா என்று? இன்றைய திரைப்படங்களிலும், நாடகங்களிலும் ஏன் இந்து மதக்கடவுள்களையே கோமாளிகளாக காட்டும் நிலை உள்ளது. இது இந்த சமயத்தில் உள்ள சமயப்பெரியவர்கள் என்றுச் சொல்லிக்கொள்பவர்கள் பேசா மடந்தைகளாக இருப்பதாலா? அல்லது இந்த மதத்தினரின் பொறுமையை இவ்வாறு கேலிக்குள்ளாக்குபவர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றார்களா? இதில் என்ன வேதனை என்றால் இவ்வாறு கேலிக்குள்ளாக்குபவர்கள் வேறு யாருமல்ல இந்து மதத்தைச் சார்ந்தவர்களே!

“நபிகள் நாயகத்தின்” திருவுருவப்படத்தை கேலிக்குரியதாக்கியதற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர்களின் எதிர்ப்பை அவ்வாறு ஆக்கியவர்கள் சந்தித்தனர். கிறித்துவமதத்தை பற்றி எழுதிய சாலமன் ருஸ்டியின் நிலையை யாவரும் அறிந்ததே. ஆனால் தொன்மையான இந்து மதத்தின் கடவுள்களை இந்தத் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் கேலிக்குரியதாக்குவது பற்றி அதன் தலைவர்கள் மௌனம் காப்பது ஏன்? அவர்களுக்கு இதைவிட வேறு முக்கிய வேலைகள் ஏதும் உள்ளனவோ? மற்ற மதத்தினர் போல உலகம் தழுவிய, நாடு தழுவிய போரட்டங்களை நடாத்தத் தேவையில்லை. ஆகக்குறைந்தது ஒரு கண்டன அறிக்கையையாவது அவர்கள் வெளியிடலாம் தானே! வேறு எந்த மதத்திலும் உள்ளவர்கள் தங்கள் மதத்தைப்பற்றி வெளியாரிடம் குறை கூறுவதில்லை நம் இந்துக்களைத் தவிர, அதிலும் குறிப்பாக தமிழர்கள் தான் இவ்வாறு உள்ளோம்.

இனி வரும் காலங்களில் ஆவது நாம் நமது மதத்தை பெருமைப் படு்த்தாவிட்டாலும் பரவாயில்லை, சிறுமைப்படுத்தக் கூடிய பிறர் பார்த்து கேலியாய் சிரிக்கும் அளவிற்கு சித்தரிக்காமல் இருந்தாலே போதும்.
செய்வார்களா???????????????????????????????????????????

வியாழன், 9 அக்டோபர், 2008

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் வாணிவிழா-2008

மூவின மக்களும் தொழிற்கல்வி பயிலும், வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 08-10-2008 அன்று வாணிவிழா நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வினை மாவட்ட இளைஞர் பயிற்சி நிலையத்தினர் ஒழுங்கு செய்திருந்தனர்.
இந்நிகழ்வினை தகவல் தொழில்நுட்ப விரிவுரையாளர் திரு.ச.இலங்கேஸ்வரன் அவர்கள் தலைமை ஏற்று நடாத்தினார்.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாணப் பணிப்பாளர் திரு.என்.பேராணந்தம் அவர்கள் பிரதம விருந்தினராகவும், வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் திருமதி.ஸ்ரீகாந்தரூபன் விமலேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், இளைஞர்சேவைகள் மன்றத்தின் பொருப்பதிகாரி. திரு.ஐ.சுகானி அவர்களும், வடமாகாணக் காரியாலயக் காணக்காளர் அவர்களும் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ள, ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்து கலந்து சிறப்பிக்க கலைநிகழ்வுகளுடன் விழா இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து, இசுலாமிய, சிங்கள, கிறித்துவ மதங்களைச் சார்ந்த மாணவர்கள் பெருமளவில் பங்குபற்றி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

அந்நிகழ்வின் நிழற்படத் தொகுப்புக்களை இங்கே பாருங்கள்.

செவ்வாய், 7 அக்டோபர், 2008

எனது கணினி நிறுவனத்தில் வாணி விழா-2008

எமது சண்முகா கணினிப் பயிற்சி நிலையத்தின் வாணி விழா நிகழ்வுகள் 05-10-2008 அன்று இனிதே கலைநிகழ்வுகளுடன் நடைபெற்றது. அவற்றின் நிழற்பட தொகுப்பு உங்கள் பார்வைக்கு.

ஞாயிறு, 5 அக்டோபர், 2008

நன்றி கூறுகின்றேன் என் ஆசான்களே!

அக்டோபர் 06 ஆசிரியர் தினம். எமக்கு கல்வியைப் புகட்டிய மனித தெய்வங்களின் தினம் அன்று. இந்த நன்நாளில் நான் ஓர் ஆசிரியனாய் சற்று எனது மாணவப் பருவத்தைத் திரும்பிப்பார்க்கின்றேன்.
1982ல் நேசரி (அரிச்சுவடு வகுப்ப) வகுப்பில் அ, ஆவன்ன கற்றுத்தந்த நேசரி டீச்சர் இன்றும் என் கண்களில் உள்ளார். இப்பொழுதும் அவர் எங்களுடன் இருக்கின்றார் எங்கள் ஊரில் எங்கள் வீட்டிற்கு அருகிலே. அவரிடம் நாம் கற்றது கல்வியை மட்டுமல்ல ஒழுக்கத்தையும் தான். யாரையும் ஏமாற்றுதல் அவருக்கு பிடிக்காது. அவரிடம் நான் கற்றுக் கொண்ட முக்கிய பாடங்களில் ஒன்று அது. அவரிடம் கற்ற யோசானமும், இறை சிந்தனைகளும் இன்றும் நினைவில் உள்ளன.
பின்பு வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் (நாங்கள் படிக்கும் போது வ-கோவிற்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயம்) முதலாம் ஆண்டு தொடக்கம் ஐந்தாம் ஆண்டு வரை கல்வி. இக்காலப்பகுதியில் எனக்கு கற்றுத்தந்த ஆசிரியர்கள் பலர் அவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால். அதிபர்.திரு.தங்கராஜா சேர், திருமதி.வையாபுரிநாதன் டீச்சர், திருமதி.ஓங்காரநாதன் டீச்சர், திரு.சிவஞானம் சேர் (தற்போதைய அதிபர்) , திருமதி.மயில்வாகணம் டீச்சர். திரு.சோதி மாஸ்டர், போன்றோர்கள். இக்காலப்பகுதியில் சங்கீத ஆசிரியர் ஒருவரும் கல்விக்கற்றுத் தந்தார். ஆனால் எனக்கு சங்கீதம் என்றால் வேப்பங்காய் போன்றது. ஆனால் அவர் எனக்கு எப்படியாவது சங்கீத அறிவை ஊட்ட வேண்டும் என்று எவ்வளவு முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை.
1989ல் மகாவித்தியாலயத்தில் 9 மாதங்கள் மட்டுமே கல்வி பயின்றேன். அக்காலப்பகுதியில் கணித கற்பித்த திரு.சிவதாசன் சேர் மறக்க முடியாத ஒருவர். அவரின் டியுசன் சென்டரில் படித்த காலங்கள் மறக்க முடியாதவை தான். அவரிடம் அடிவாங்காமல் தப்பித்த விரல்விட்டு எண்ணக் கூடிய மாணவர்களில் நானும் ஒருவன்.
1990 இந்தியப் பயணம். அங்கு திருச்சி சையது முர்த்துசாவில் கல்வி. முற்றிலும் புதிய சூழ்நிலை. இசுலாமியர்கள் அதிகம் படிக்கும் பாடசாலை. ஆனால் நம் ஊரில் போல் அங்கு சமயம் ஓர் பாடமாக இல்லாதது சற்று நிம்மதி தந்தது. தரம் 6 தொடக்கம் தரம் 10 வரையிலுமான காலப்பகுதியில் அங்கு கல்வி கற்றேன். அந்தக் காலப்பகுதியில் நான் தான் அங்கு ராஜா. இலங்கை மாணவன் என்ற மரியாதை கலந்த அன்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில். அந்தக் காலப்பகுதியில் எனக்கு கணித கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் திருமதி.துளசிபாய் டீச்சர். மிகுந்த சிரத்தையுடனும் அன்புடனும் நான் 100ற்கு 100 எடுக்க வேண்டும் என்று பாடுபட்டார். என் வாழ்வில் மறக்க முடியாத மிகுந்த மரியாதைக்கும் அன்பிற்கும் உரிய ஆசிரியர் அவர். ஆனால் என்னால் 98 மதிப்பெண்களே எடுக்க முடிந்தது. கணித தேர்வு நடந்த அன்று மேற்பார்வையாளரால் ஏற்பட்ட சில அசௌகரியங்களே நான் 100 மதிப்பெண்கள் பெற இயலாமல் போனதுக்கு காரணம் என்பதை அறிந்து மிகவும் கவலையடைந்தார்.
அதன் பிறது இரண்டு வருடங்கள் எனது A/L (+2) தேர்விற்காக நான் திருச்சி தேசிய மேல்நிலைப்பள்ளியில் கல்வி கற்றேன். கணினி அறிவியல் பிரில் சேர்ந்தேன். அங்கு ஏனோ எந்த ஆசிரியரும் எனக்கு பெரியாத மனதைக் கவரவில்லை.
1994ல் கல்லூரி வாழ்க்கை ஆரம்பம். திருச்சி உறுமு தனலட்சுமி மாலை நேரக்கல்லூரியில் இளங்கலை கணினி விஞ்ஞானம். இங்கு என் மனதைக் கவர்ந்த விரிவுரையாளர்கள் பலர். அதில் பெரிதும் கவர்ந்தவர்கள் எமது கணினித் துறை தலைவர் திரு.ஆர்.எம்.பி சேர், பௌதிகவியல் துறைத்தலைவர் திரு.சக்திவேல் சேர் அவர்கள் எப்பொழுதும் என் நினைவினில் இருக்கின்றார்கள்.
இன்று நானும் ஓர் ஆசிரியனாய் உங்கள் முன். இந்நிலையில் நான் என்னை ஆளாக்கிய ஆசிரியர்கள் அனைவரையும் நினைத்துப்பார்க்கின்றேன். அவர்களுக்கு இந்த நன்நாளில் நன்றி கூற கடைமைப்பட்டுள்ளேன். அவர்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.