Exam

புதன், 30 ஜூன், 2021

சனி, 29 அக்டோபர், 2016

நீண்ட காலத்திற்கு பின்னர் 

புதன், 9 ஜூன், 2010

நல்லாசிரியருக்கான அமெ. விருது இம்முறை இந்தியருக்கு!



ஆசிரியருக்கான விருது, இம்முறை அமெரிக்க வாழ் இந்தியரான ராதிகா பிளக்காட் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணித பாடங்களைச் சிறப்பாக கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதியின் 'நல்லாசிரியர்' விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு நல்லாசிரியர் சான்றிதழும், ரூ.5 லட்சம் பரிசும் அதிபரால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான சிறந்த அறிவியல் ஆசிரியருக்கான விருது, அமெரிக்காவில் வாழும் இந்தியரான ராதிகா பிளக்காட் என்பவருக்கு வழங்கப்பட்டது. இதற்கான விருதை அதிபர் ஒபாமா வழங்கிப் பாராட்டினார்.

ராதிகா பிளக்காட், மேரி லேண்டில் கல்வெர்ட் கவுண்டியிலுள்ள கண்டிங்டவுன் உயர் நிலைப்பள்ளியில் உயிரியல் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். _

பிரபல கணிதத்துறை ஆசிரியர் மாரடைப்பால் மரணம்



மலையகத்திலிருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட பொறியியற்துறை
மாணவர்களை உருவாக்குவதற்குக் காரணமாகவிருந்த ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் கணிதத்துறை ஆசிரியர் கே.ஜீவராஜன் நேற்று 8 ஆம் திகதி மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

வகுப்பில் நேற்றுக் கற்பித்துக் கொண்டிருந்த வேளை, திடீரென மயக்கமுற்றுக் கீழே விழுந்த இவர், உடனடியாக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றபோது உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

1995 ஆம் ஆண்டிலிருந்து ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் உயர்தர கணிதத்துறையில் கல்விக் கற்பித்து வந்த இவரிடம் பயின்ற 200க்கும் மேற்பட்ட மலையக மாணவர்கள் தற்போது பொறியியலாளர்களாக உள்ளனர். மேலும் பல மாணவர்கள் பல்வேறு துறைகளில் பதவி வகித்து வருகின்றனர்.

இவர் பல வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் பெற்று, வெளிநாடுகளுக்கும் சென்று வந்தவராவார். ஹட்டன் கல்வி வலயத்தின் கணிதப்பாட ஆசிரியர் ஆலோசகராகவும் இவர் சேவையாற்றியுள்ளார்.

ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சர்வதேச ஒலிம்பியாட் கணிதத்திறன் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சர்வதேச ஒலிம்பியாட் கணிதத்திறன் போட்டியில் ஹைலண்ஸ் கல்லூரி மாணவர் ஒருவர் இலங்கைக்கு வெண்கலப் பதக்கமொன்றைப் பெற்றுத் தருவதற்கும் இவரே காரணகர்த்தாவாவார்.

மலையகத்தமிழ்க் கல்வித்துறை வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஆசிரியர் ஜீவராஜனின் இழப்பு ஈடுசெய்ய முடியாததொன்றாகும்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை 10 ஆம் திகதி ஹட்டனில் இடம்பெறுமெனத் தெரிவிக்கப்படுகிறது. (நன்றி-வீரகேசரி)

அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

நீங்காத நினைவலைகள்

ஆறாத்துயரில் ஆண்டுகள் மூன்று



அன்னை மடியில்- 09-05-1951
அரன் அடியில்- 31-12-2007
அமரர் திருமதி.கிருஷ்ணவத்சலா பத்மநாதன்
அவர்கள்
திதி- 07-01-2010

நெஞ்சார எமையணைத்தே நேசமாய் நாளும்
பண்பாகப் பேசி அழகுதந்த மாமியே!
ஆண்டுகள் மூன்று அழிந்தாலும்
உன் அன்பு முகம் எம்மைவிட்டகலுமா மாமி!
பெற்ற தாய் போல் எங்களை சீராட்டி
அரவணைத்த எங்கள் அன்பு அன்னையே
இனி என்று காண்போம் உங்கள் அன்பு முகம்??


என்றும் தங்களின் நினைவலைகளில்
உற்றார் உறவினர்கள்

வெள்ளி, 25 டிசம்பர், 2009

முத்துத்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக

மழைக்கால இன்றைய மாலை நேரத்தில் சற்று ஓய்வாக இருந்த போது தூரத்தில் எங்கோ ஒலித்த “முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி...” பாடல் என்னுள் எனது இளமை கால நினைவுகளை சற்று அசைபோட வைத்தது.

நாங்கள் உடன் பிறந்தவர்கள் 4 பேர் அண்ணா 2 பேர், 1 தங்கை. எங்களை கண்டிப்புடன் நல்வழியில் நடப்பதில் பெரியவர் அக்கரை செலுத்தினார். சிறியவர் எங்கள் கல்விவளர்ச்சியில் அக்கறை காட்டினார்.

இன்று நாங்கள் அனைவரும் திருமண பந்தத்தில் இணைந்து ஒவ்வொரு திசைநோக்கி பயணிக்கின்றோம். பெரியவர் வலைகுடா நாடொன்றிலும். சிறியவர் மற்றும் தங்கை வவுனியாவிலும். நான் திருகோணமலையிலும் வாழ்க்கையை தொடர்ந்தாலும் எங்கள் இதயங்கள் என்றும் ஒன்று பட்டே உள்ளன.
தந்தையின் மறைவிற்கு பின் என்னையையும் தங்கையையும் தாயாருடன் சேர்ந்து பாசமாக வளர்த்ததில் எங்கள் அண்ணன்மாரின் பங்கு மகத்தானது.

அப்பாடலின் ஆரம்ப வரியான “முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக ” என்ற வரிகளை திரு.கண்டசாலா அவர்களின் குரலினில் கேட்கும் போது கண்களின் ஓரங்களில் நீர் துளிகள்...

“சின்னத் தம்பி கடைசித்தம்பி செல்லமாய் வளர்ந்த பிள்ளை...” என்ற வரிகள் என் அண்ணன்மார் பாடுவது போன்ற ஓர் உணர்வினை ஏற்படுத்த மனதை பிரிவின் வேதனை வாட்டிவிட்டது.

என்னுள் மலரும் நினைவுகளை ஏற்படுத்திய அப்பாடலை நான் முழுமையாக இணையத்தில் பலமுறை இப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கின்றேன். நீங்களும் கேட்டிட இவ்விணைப்பிற்கு சென்றிடுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


ஞாயிறு, 20 டிசம்பர், 2009

face book பணப்பரிசு

நண்பர் முகமட் அஸ்ரப்பின் என்னால் முடியும் என்ற பக்கத்திற்கு சென்று அவரின் பதிவில் உங்கள் கருத்துக்களை இட்டு செல்லிடத் தொலைப்பேசிக்கு மீள்நிரப்பும் தொகையினை பரிசாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.

இப்பரிசினை பெற்ற முதலாவது நபர் என்ற வகையில் இதை வெளியிடுகின்றேன்.

சனி, 12 டிசம்பர், 2009

சிற்பக்கலாமணி செல்லையா சிவப்பிரகாசம் ஐயா அவர்களுடன் ஓர் சந்திப்பு

சமீபத்தில் எனது அலுவலக பணி நிமித்தம் யாழ் சென்ற பொழுது ஓர் கலைப்பொக்கிசத்தை சந்திக்கும் வாய்ப்பு வடக்கு மாகாண கல்வித்திணைக்கள ஆரம்பக் கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.இ.இராஜேஸ்வரன் அவர்கள் ஊடாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட அனுபவப் பகிர்வினை இங்கு பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகின்றேன்.

அக்கலைஞரின் பெயர் திரு.செல்லையா சிவப்பிரகாசம் இவர்(யாழ் மத்திய கல்லூரி ஓய்வுபெற்ற சித்திர ஆசிரியராவார். அவரின் துனைவியார் ருமதி.அன்னலட்சுமி அவர்களும் அதே யாழ் மத்திய கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் என்பது சிறப்பு. இவர்களின் இரு பிள்ளைகள் - திரு.துஸ்யந்தன் -பொறியலாளர்-ஜெர்மனி, வைத்தியகலாநிதி. அனுஷியந்தன்-மகரகம புற்றுநோய் வைத்தியசாலை ஆகியோர் ஆவர்.


இவர் தனது கலைத்துறையின் பிரவேசத்தை இவ்வாறு கூறுகின்றார். “எனது சொந்த இடமான அளவெட்டி ஞானோதயாவில் 1939ஆம் ஆண்டு தரம் 05ல் படித்துக்கொண்டிருக்கும் போது குன்றன்குடி அடிகளார் எமது பாடசாலைக்கு வந்தார். அன்று நடந்த சித்திரப் போட்டியில் எனது சித்திரம் முதல் இடம் பெற்றது.
அடிகளார் என்னை அழைத்து எனது பெயரை கேட்டு அறிந்து இனி உன்வாழ்க்கை பிரகாசமாய் அமையும் என்று வாழ்தினார்.

தொடர்ந்து SSC முடித்து விட்டு ஆங்கிலம் படிப்பதற்கு தெல்லிப்பளை மகாஜெனக்கல்லூரிக்குச் சென்றேன். 1947 ல் பாடசாலைச்சின்னம், மகுடவாசகம் ஆகியவற்றை உருவாக்குவதற்கு நடைபெற்ற போட்டியில் என்னால் வரையப்பட்ட சின்னமும், “உன்னையே அறிவாய்” என்ற மகுடவாசகமும் உள்ளது.”

1952 முதல் 1956 வரை கொழும்பு கொழும்பு நுன்கலைக் கல்லூரியில் சிற்பம், ஓவியம் ஆகிய கலைகளை கற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அங்கு நடைபெற்ற சிற்பப் போட்டியில் ஆபிரகாம் லிங்கன் அவர்களின் சிலையை வடித்து எலிசபெத் மகாராணியின் கையினால் ரூபா 1000 பணப்பரிசினை பெற்றுள்ளார்.

இவரின் கையால் இன்று எம்முடன் அழகுற காணப்பெறும் அவரது கலைப்பொக்கிசங்கள் சில...
  • வவுனியாவில் உள்ள பண்டாரவன்னியன் சிலை
  • யாழில் உள்ள சங்கிலியன் சிலை
  • சேர்பொன் இராமநாதன் சிலை
  • வவுனியா நூல்நிலைய முகப்பை அழங்கரிக்கும் புடைப்புச் சிற்பங்கள் மற்றும் சரஸ்வதி தேவி சிலைகள்.
  • வவுனியா பகவான் ஸ்ரீசத்தியசாயி சேவா நிலையத்தில் உள்ள கீதை உபதேசம் செய்யும் தேர் மற்றும் அங்குள்ள 10 அவதாரச் சிற்பங்கள்
இவரது கலைப்படைப்புக்களுக்கு கிடைத்த சிறப்புக்கள் சில...
  • 1974ல் சேர்பொன் இராமநாதனின் சிலை வடித்தமைக்காக ஸ்ரீமாவோ பண்டார நாயக்க அவர்களால் “சிற்பக்கலாநிதி” பட்டம் கிடைத்தது.
  • 1996ல் அப்போதைய கலாச்சார அமைச்சர் லக்மன் ஜெயக்கொடி அவர்களால் “கலாபூசணம்” பட்டம் கிடைத்தது.
  • 1996 ல் கொழும்பு சபரிமலை சாகித்திய மண்டபம் “சிற்பக்கலாமணி” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.
  • 2001 ல் சுழிபுரைம் விக்ரோறியாக் கல்லூரி ஸ்தாபகர் செல்லப்பாவின் முழு உருவச் சிலையை செய்தமைக்காக உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னராஜா அவர்களால் “சிற்பச்சக்கரவர்த்தி” என்ற பட்டம் வளங்கி கெளரவிக்கப்பட்டது.
  • 2005 ல் கொழும்பில் நடைபெற்ற 5ஆவது சேக்கிழார் உலகமகாநாட்டின் போது இந்தியா சோழமண்டலம் ஆதினம் “திருத்தொண்டர் மாமணி” பட்டத்தை வழங்கியது.
  • 2006ல் வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது கிடைத்தது.
  • 2007ல் யாழ்மாவட்டத்தில் முதலாம் இடமும், வடக்கு மாகாணத்தில் முதலாம் இடமும் பெற்றமைக்காக ஜனாதிபதி விருது கிடைத்தது.
இவரின் சிற்பக் கூடத்தில் உள்ள தமிழ்நங்கையின் சிலை







இவ்வளவு சிறப்புக்கள் பெற்றுள்ள எம் பெருந்தகையின் ஆசையாக எம்மிடம் எடுத்தியம்பியது “எனது இறுதிக்காலம் வரை அற்புதமான இந்தக் கலைப்படைப்பை செய்து கொண்டே இருப்பது ” என்பது தானாம்.





புதன், 21 அக்டோபர், 2009

பேராசிரியர் மு.இளங்கோவன்

தமிழே தன் மூச்சு என்று தனது தமிழ் பணியினை செம்மனே செய்யும் எனது நண்பரும், புதுச்சேரி பலகலைக்கழகத்தில் பேராசிரியராய் பணிபுரிபவருமாகிய முனைவர் திரு. மு.இளங்கோவன் அவர்களுக்கு செம்மொழி இளம் அறிஞர் விருதினை இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் விருதுகளை அறிவித்திருப்பதை இட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். பொருத்தமான நேரத்தில் பொருத்தப்பாடுடைய ஒருவருக்கு வழங்குவதால் அவ்விருது பெருமையடைகின்றது.

வெள்ளத்தால் அவரது புதுச்சேரி வீடு தண்ணீரில் நிரம்பியிருந்த போதும் தன்னால் சேர்க்கப்பட்ட அரிய நூல்கள் தண்ணீரில் வீனாகி விட்டதே என்று கலங்கியவர் அப்பெருந்தகை. நாம் எல்லோரும் பெரும்பாலும் பிரிசித்திப்பெற்ற பெருந்தலைவர்களைப் பற்றியே எழுதுவோம். ஆனால் அவரோ குக்கிராமங்களில் இருந்து தமிழ்ப்பணி செய்து வரும் தமிழ்ப்பெருந்தகைகளை எமக்கு தனது வலைப்பூவின் வாயிலாக எடுத்தியம்பியவர்.

இவரது நூல்கள்

இவரது வலைப்பூவினை கட்டு மகிழுங்கள்

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

இலங்கை பதிவர் சந்திப்பு

இந்திய வலைப்பதிவர்களின் பதிவுகளில் சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு, கோவையில், சேலத்தில் என்று பதிவுகள் வரும் போதெல்லாம் என்னுள் ஓர் ஏக்கப் பெருமூச்சு எழும். ஏன் இலங்கையில் ஓர் இலங்கை பதிவர்களுக்கான சந்திப்பை நாம் நடாத்தவில்லை என்று.காலச்சூழல் பொருளாதார நிலை இரண்டின் தாக்கங்களால் என்னால் அவற்றை மனதில் மட்டுமே நினைத்துப் பார்க்க முடிந்தது. இந்நிலையில் பதிவர் திரு.வந்தியதேவன் அவர்களிடம் இருந்து ஓர் மின்னஞ்சல் இலங்கையில் பதிவர் சந்திப்பு என்று. என்னுள் உற்சாகம் பீறிட்டுள்ளது. வரும் 23ஆம் திகதியாம் கொழும்பில் நிட்சயம் கலந்து கொள்ள வேண்டும்.

இப்பதிவின் மூலம் எனது மாணவர்களும் எனது ஏனைய நண்பர்களும் இச்சந்திப்பில் கலந்து சிறப்பிக்க வேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன்.


காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்), கொழும்பு 06.


நோக்கங்கள் :
இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.

பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்

இன்னும் பல‌..

வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.


லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.


பிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின் மின்னஞ்சல் முகவரிகள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபணைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவாளர்கள், ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கவும்; உங்கள் வருகை பற்றி உறுதிப் படுத்தவும்.

யாரையும் தவறவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாயுள்ளோம்.. யாராவது ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.. எம்முடன் இணைந்து முன்னெடுக்க ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள்.

இருவாரங்கள் தாராளமாக இருப்பதால் இலங்கை முழுவதும் இருந்து பங்கேற்பை எதிர்பார்க்கிறோம்.

உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.